search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடலூர் தைப்பூசம்"

    வடலூர் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற இடத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. ஆண்டு தோறும் இங்கு தைப்பூசத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறும். அதன்படி கடந்த 20-ந்தேதி சத்திய ஞானசபையில் சன்மார்க்க கொடியேற்றம் நடந்தது.

    இதேபோல் வள்ளலார் அவதரித்த இடமான மருதூர் இல்லம், தண்ணீரால் விளக்கெரித்த கருங்குழி இல்லம், வடலூர் தர்ம சாலை, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் கொடியேற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து 21-ந்தேதி (திங்கட்கிழமை) சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதியை தரிசனம் செய்தனர்.

    ஜோதி தரிசனம் முடிந்த பின்னர், மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாக திருமாளிகையில் திருஅறை தரிசனம் நடைபெறுவது வழக்கம். இங்குள்ள ஒரு அறையின் உள்ளே சென்ற வள்ளலார் அங்கு உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டு, சித்தி பெற்றார். அந்த அறைக்கு தீபம் காண்பிக்கப்படுவதே திருஅறை தரிசனம் என்பதாகும். அதன்படி மேட்டுக்குப்பத்தில் நேற்று திருஅறை தரிசனம் நடைபெற்றது. முன்னதாக, சத்தியஞானசபையில் வள்ளலார் பயன்படுத்திய பொருட் கள் அடங்கிய (பேழை) பெட்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்டது.

    காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அந்த பெட்டி பல்லக்கில் வைத்து மேளதாளங்கள் முழங்க வடலூர் சத்தியஞானசபையில் இருந்து மேட்டுக்குப்பத்தில் உள்ள திருமாளிகைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பல்லக்கை கருங்குழியை சேர்ந்த மீனவர் சமூகத்தினர் தங்களது தோளில் சுமந்து சென்றனர்.

    கருங்குழியில் வள்ளலார் வழிபட்ட பிள்ளையார் கோவில், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி ரெட்டியார் இல்லம், வள்ளலார் வழிபட்ட பெருமாள் கோவில், அவர் நீராடிய தீஞ்சுவை நீரோடை வழியாக ஊர்வலம் சென்றது. அப்போது கருங்குழி செம்புலிங்கம் குடும்பத்தினர் சீர்வரிசை பொருட்கள் வைத்து வரவேற்று, வழிபட்டனர்.

    11.30 மணிக்கு மேட்டுக்குப்பத்தில் திருஅறை உள்ள சித்திவளாக திருமாளிகைக்கு ஊர்வலம் வந்தடைந்தது. அப்போது அங்கு கிராம மக்கள் பழம், சீர்வரிசை பொருட்களுடன் வரவேற்று, வழிபட்டனர். இதைத் தொடர்ந்து திருஅறை தரிசனம் நடைபெற் றது. சித்தி வளாக திருமாளிகையில் வள்ளலார் சித்தி பெற்ற திருஅறையில், 12 மணிக்கு ஞானசபை பூசகர் தீபம் காண்பிக்க, திருஅறை தரிசனம் தொடங்கியது.

    அப்போது அந்த அறையின் முன்பாக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்கிற மகா மந்திரத்தை உச்சரித்தனர். இதையடுத்து பக்தர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக சென்று, திருஅறையை தரிசனம் செய்தார்கள். மாலை 5 மணி வரையில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருஅறை தரிசனத்தை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர்.
    வடலூரில் சத்திய ஞானசபையில் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் ஏழு திரைகளை விலக்கி இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகள் இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உணர்த்தும் விதமாக கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார். அதில் கடந்த 1872-ம் ஆண்டு சன்மார்க்க கொடியேற்றி முதல் ஜோதி தரிசனத்தை நிகழ்த்தினார்.

    அன்று முதல் மாதம் தோறும் பூச நட்சத்திர தினத்தன்று ஆறு திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டு வருகிறது. அதே போல ஆண்டுதோறும் தைமாத பூச நட்சத்திரத்தன்று மட்டும் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும்.

    இந்தஆண்டு 148-வது ஜோதி தரிசன விழா சத்திய ஞானசபையில் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 10 மணிக்கு ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி‘ என்கிற வள்ளலாரின் பாடலை அங்கு கூடியிருந்தவர்கள் பாடினர்.

    இதேபோல் வள்ளலார் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லம், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரிய செய்த கருங்குழி, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சத்தியஞானசபையில் இரவு 7 மணிக்கு திருஅருட்பா கருத்தரங்கம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் ஏழு திரைகளை விலக்கி இன்று காலை 6 மணி, 10 மணிக்கு நடைபெற்றது. அதன் பின்னர்  நண்பகல் 1 மணிக்கு நடக்க உள்ளது.

    இன்று காலை நடைபெற்ற ஜோதி தரிசன விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



    தொடர்ந்து இந்த ஜோதி தரிசனம் இரவு 7 மணி, 10 மணி, நாளை அதிகாலை 5.30 மணிக்கும் ஏழு திரைகளை நீக்கி நடைபெறுகிறது.

    தைப்பூச ஜோதி தரிசனத்தில் கலந்து கொள்ள கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பஸ், வேன், கார்களில் வந்து குவிந்தனர்.

    வடலூரில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்களாக காணப்பட்டன. சத்திய ஞானசபையில் அமைக்கப்பட்டுள்ள அணையா அடுப்பில் தொடர்ந்து சமையல் செய்து தர்மசாலையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் வடலூரில் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், மோர் வழங்கப்பட்டது.

    தர்மசாலை மேடையில் தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி நடைபெற்று வருகின்றன.

    தைப்பூச ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், விழுப்புரம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    வடலூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ள தால் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தைப்பூச ஜோதிதரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.
    தைப்பூசத்தில் சிறப்புகள் பல இருந்தாலும், வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனம் விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக வருடா வருடம் கொண்டாடப்படுகிறது.
    “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி”

    தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும் முழுநிலவுநாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். தைப்பூசத்தில் சிறப்புகள் பல இருந்தாலும், வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனம் விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக வருடா வருடம் கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன வழிபாடு வருகிற 21, 22-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. 21-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 5.30, 10, மதியம் 1 மணி, இரவு 7,10 மணிக்கு திரை விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறும். மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெறும். இந்த தைப்பூச ஜோதி தரிசன வழிபாடு எப்படி தோன்றியது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், அதை தோற்றுவித்த வள்ளலார் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    கடலூருக்கு அருகே உள்ள மருதூர் எனும் சிற்றூரில் இராமையா, சின்னம்மை இணையருக்கு 1823-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் ஐந்தாவது ஆண் குழந்தையாக இராமலிங்கம் பிறந்தார். தந்தை காலமான பின்பு அவரது தாய் தனது குழந்தைகளோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார். காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் இராமலிங்கம் கல்வி பயிலத் தொடங்கினார். அடிக்கடி இராமலிங்கம் கந்தகோட்டத்துக் கந்தசாமி கோயிலுக்குச் செல்வார். இளம் அகவையிலேயே இறைவன் மீது மிகுதியான பாடல்களை இவர் பாடியுள்ளார்.

    பள்ளிக்கும் போகாமல், வீட்டிலும் தங்காமல் கோவிலே கதி என்றிருந்த இராமலிங்கத்தை அவரது அண்ணன் கண்டித்துத் தனது மனைவியிடம் இராமலிங்கத்துக்கு சாப்பாடு போடுவதை நிறுத்துமாறு கடுமையாக உத்தரவிட்டார். பாசமான அண்ணியின் வேண்டுகோளுக்கு இணங்கி இராமலிங்கம் வீட்டில் தங்கிப் படிப்பதாக உறுதியளித்தார்.

    அவர்களது வீட்டில் இராமலிங்கத்துக்கு மாடியறை ஒதுக்கப்பட்டது. சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அறையிலேயே தங்கி முருக வழிபாட்டில் முனைப்பாக ஈடுபட்டார். ஒரு நாள் சுவரிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் திருத்தணி முருகன் தனக்குக் காட்சியளித்ததாகப் பேரின்பமுற்றுப் பாடல்கள் பாடினார்.

    அவரது பன்னிரண்டாம் வயதில் நாள்தோறும் ஏழுகிணறு பகுதியிலிருந்து நடந்தே திருவொற்றியூர் சென்று வழிபட்டு வரத் தொடங்கினார் இராமலிங்கம், பலரது வற்புறுத்தலுக்கு இணங்கத் தன் இருபத்தேழாவது அகவையில், அவரது தமக்கையின் மகள் தனக்கோடியைத் திருமணம் புரிந்து கொண்டார். எனினும், இராமலிங்கம் அவர்கள் அமைதியை நாடினார். கடவுள் என்றால் என்ன? என்று அறிய விரும்பி, 1858-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து புறப்பட்டுப் பல திருத்தலங்களைப் பார்வையிட்டுச் சிதம்பரத்தை வந்தடைந்தார்.

    அங்கே கருங்குழி ஊரின் மணியக்காரரான திருவேங்கடம் என்பவர் இராமலிங்கத்தைச் சந்தித்து தனது இல்லத்தில் வந்து தங்கியிருக்குமாறு ண்டிக் கொண்டார். அவரது அன்புக்குக் கட்டுப்பட்டு அவரது இல்லத்தில் ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார் இராமலிங்கம். அவர் தங்கியிருந்த அறையில் விளக்குக்கு எண்ணெய் வைக்கும் மண்கலயம் உடைந்துவிட, மணியக்காரரின் மனைவி புதுக்கலயம் ஒன்றை வைத்தார். அந்தக் கலயம் பழக்கப்பட வேண்டுமென்று அதில் நீர் நிரப்பிவைத்தவர், பின்னர் அதைத் தூய்மையாக்கி எண்ணெய் நிரப்பி வைக்க மறந்துபோனார். கலயத்தில் நீர் அப்படியே இருந்தது.

    அன்றிரவு, இராமலிங்கம் வெகுநேரம் வரையில் எழுதிக் கொண்டிருந்தார். விளக்கில் ஒளி மங்கும்பொதெல்லாம் கலயத்தில் இருந்த நீரை, எண்ணெய் என்று நினைத்து விளக்கில் ஊற்றிக் கொண்டே இருந்தார். விடியும்வரை விளக்கு ஒளிவிட்டுத் தண்ணீரில் எரிந்த அற்புதம் அன்று நிகழ்ந்தது.

    கருங்குழியில் தங்கியிருந்தபோது 1865-ஆம் ஆண்டு இராமலிங்கம் ‘சமரச வேத சன்மார்க்கச் சங்கம்‘ என்ற அமைப்பை உருவாக்கினார். பின்னர் அதைச் “சமரசச் சுத்தச் சன்மார்க்கச் சத்தியச் சங்கம்‘ என்று மாற்றியமைத்தார். அதில் மக்கள் பின்பற்றக்கூடிய மிக எளிய கொள்கைகள் பலவற்றை அறிவித்தார். உயிர்க்கருணை (‘ஜீவ காருண்ய’) ஒழுக்கத்தை‘ கடைபிடிக்கச் சொல்லி அனைவரையும் வலியுறுத்தினார். பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லா நற்பயன்களுக்கும் மேலானது என்று அறிவுறுத்தி வந்த அவர், அன்னதானச் சாலை ஒன்றை அமைக்க எண்ணம் கொண்டார்.



    கருங்குழிக்குப் பக்கத்தில் வடலூரில் பார்வதிபுரம் என்னும் ஊர் மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867-ஆம் ஆண்டு, மே மாதம் 23-ஆம் நாளன்று அங்கு சமரச வேதத் தருமச்சாலையைத் தொடங்கினார். இங்கு, சாதி, சமய, மொழி, இன, நிறப்பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. அவர் அன்று ஏற்றி வைத்த அடுப்பும் இன்று வரை அணையாமல் தொடர்ந்து அன்னம் உருவாக்க எரிந்த வண்ணம் இருக்கிறது.

    தனிமையை விரும்பிய வள்ளலார், வடலூரிளிருந்து விலகி, அருகில் இருக்கும் மேட்டுக்குப்பம் சென்றார். அங்கு சில வருடங்கள் பயன்படாமல் இருந்து வந்த ஒரு வைணவ மதத் திருக்கூடத்தில் தங்கினார். அந்த இடத்துக்குச் ‘சித்தி வளாகத் திருமாளிகை‘ என்றும் பெயர் சூட்டினார். அங்கு அவர் அடிக்கடி ‘பிரமதண்டிகா யோகம்‘ செய்து வந்தார். அதாவது, இருபுறமும் இரும்புச் சட்டிகளில் நிலக்கரி கனன்று எரிய, நடுவில் அமர்ந்து ‘தியானத்தில்‘ இருப்பது பிரமதண்டிகா யோகம். அகச்சூடு நிறைந்த வள்ளலார், புறத்தே இவ்விதம் சூடேற்றித் தம் உடலை வெப்ப உடலாக ஆக்கி வந்தார்.

    இறைவனை ஒளி வடிவமாகப் போற்றிய ராமலிங்க அடிகளார் வள்ளலார் என்று அறியப்பட்டு சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை 1871-ஆம் ஆண்டு அமைக்கத் தொடங்கினார். சுமார் ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அந்தத் திருக்கோயிலுக்குச் ‘சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபை‘ என்று பெயர் சூட்டினார்.

    25.1.1872, தை மாதம் 13-ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஜோதி தரிசனம் செய்யும் வழிபாட்டு விழா நடைபெற்றது. 20.10.1973, அன்று திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு அருளுரை வழங்கினார். அதுவே ‘பேருபதேசம்‘ என்று சொல்லப்படுகிறது.

    தமது அறையில் எப்போதும் எரிந்து வந்த தீப விளக்கை சித்திவளாகத் திருமாளிகையின் முன்புறம் எடுத்து வைத்தார். மக்களிடம், தீப விளக்கைத் தொடர்ந்து வழிபட்டு வரச் சொன்னவர், தெய்வ பாவனையை இந்த தீபத்தில் கண்டு ஆராதியுங்கள் நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்‘ என்று உறுதி அளித்தார்.

    1874-ஆம் வருடம் தை மாதம் 19-ஆம் நாள், புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் வள்ளலார் அனைவருக்கும் அருள் வாழ்த்து வழங்கி விட்டு இரவு பன்னிரண்டு மணிக்குச் சித்திவளாகத் திருமாளிகைத் திருஅறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டார். அவரது விருப்பப்படி, அவரது முதன்மைச் சீடர்கள் மூடப்பட்ட அறையின் வெளிப்புறத்தைப் பூட்டினார்கள்.

    அன்று முதல் வள்ளலார் இராமலிங்கம் அடிகளார், உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல் அருவமாக நிறைந்து அருட்பெருஞ்சோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார். வள்ளலார் ஏற்றி வைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. அவர் சித்திபெற்ற அறையின் பூட்டப்பட்ட கதவுக்கு வெளியே அமர்ந்து ஒருமை வழிபாடு செய்யலாம். மாதந்தோறும் பூச நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தைப்பூசத்துக்கு மூன்றாவது நாள் இந்த அறையைப் பலகணி வழியாகப் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத்தன்மை என்ற ஒப்பற்ற ஒளி இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், தன்னலம். பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்துவிடுகிறது. இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் காண்கிறான்.

    ஜோதி தரிசனகாட்சி என்பதும் இது போலத் தான். ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் தீபத்தின் ஜோதி ஒளியைக் காண இயலும். கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள். அதனால் தான் இன்றும் ஒளிக்காட்சி முன்பு ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்படுகிறது. திரைகள் விலகியதும் ” அனல் பிழம்பாக ஜோதி ஒளிக்காட்சி” கண்ணாடியில் கண்டதும் நம் உள்ளே கண்டிப்பாக அதிர்வு ஏற்படும்.

    அவர் ஏற்றிய அந்த அகல்தீபம் இன்று வரை அணையா ஒளியாகப் பேணப்பட்டு வருகிறது. அது தான் அந்த அறைக்குள் இருக்கும் ஆறேமுக்கால் அடி உயரமும் நாலேகால் அடி அகலமும் கொண்ட ஒரு கண்ணாடியில் பட்டு எதிரொளிக்கிறது. அந்தத் தீபத்தின் எதிரொலியே ‘ ஒளி‘ ஆகும். அந்தக் கண்ணாடி, வள்ளலாரால் நாற்பத்தெட்டு நாட்கள் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

    இந்த ஜோதி தரிசனத்தை காண்பதற்கு 21-ந்தேதி (திங்கட்கிழமை) லட்சக்கணக்கில் மக்கள் வந்து குவிந்த வண்ணம் காத்திருப்பார்கள். இறைக்காட்சியோடு, தங்களையே தாங்கள் காணும் உணர்வு இந்தப் பொழுதில் கிடைத்து விடுவதாக மரபு. இந்த ஜோதி தரிசன வழிபாட்டை காண தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் ஒரு முறையாவது வடலூர் சென்று திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்களின் சத்திய ஞானசபையைப் பார்க்க வேண்டும். அது உங்களை ஞானம் உள்ள பக்குவப்பட்ட மனிதனாக மாற்றும். 
    வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூச விழா நாளை (ஞாயிற்றுக் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    வடலூர் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர் வள்ளலார். பின்னர் இவர் சென்னை, கருங்குழி, வடலூர் ஆகிய பகுதிகளில் வசித்து வந்தார். 14 ஆண்டுகள் கருங்குழியில் தங்கிய வள்ளலார் திருவருட்பா எழுதினார். இறைவன் ஒளி வடிவானவர் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார்.

    மேலும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தருமச்சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தருமச்சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார்.

    இதைத்தொடர்ந்து மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று சத்திய ஞானசபையில் 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 148-வது தைப்பூச திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவையொட்டி அன்று காலை 5 மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு தருமச்சாலை, மருதூர் இல்லம், கருங்குழி இல்லம், மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும், காலை 10 மணிக்கு ஞானசபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    தைப்பூச திருவிழாவான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 5.30 மணி ஆகிய 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. பின்னர் 23-ந்தேதி மேட்டுக்குப்பத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.

    விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார் கள் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் விழா நடைபெறும் இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். மாவட்ட கலெக்டர் அறிவுரையின் பேரில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ முகாம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. சென்னை, கும்பகோணம், தஞ்சை போன்ற பிற மாவட்டங்களில் இருந்து வடலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    ×